நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘வருகிற 2026 தேர்தலுக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்படியானால், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்கமாட்டோம்’ என தெளிவாக சொல்லிவிட்டார். இந்த நிலையில்தான், கே.சி.பழனிசாமி, ‘அ.தி.மு.க. என்ற அவங்க அப்பன் வீட்டு சொத்தா..?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்தான், ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால்தான் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என மூத்த நிர்வாகிகள் சிலர் கூறி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பி வருகிறார்கள். அதற்கு அவர் முடியாது என்பதை போலவும் அவர் என்னென்ன செய்தார் என்பதை பட்டியலிட்டும் மறுத்து வருகிறார். இந்த நிலையில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கலக குரலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே எழுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக; அவர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக கலகக்குரல் எழும். அந்தக் குரல் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று பலமுறை சொல்லிவந்தேன்.
நேற்று சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே வைத்து கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள். தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல… பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை… இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்… இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை… பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்… இனியும் தாமதிக்கக் கூடாது… இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள்.
எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க… வாதங்கள் தடித்து… முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும். அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்! நாரதர் கலகம் மட்டுமல்ல… ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்… முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்!’’ இவ்வாறு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இணைப்பிற்கு எதற்காக யோசிக்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஓ.பி.எஸ்.ஸை சேர்த்தால் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்பார்கள். சசிகலாவை சேர்ந்த்தால் டி.டி.வி.தினகரன் சேரவேண்டும் என்பார்கள். சசிகலாவும், டி.டி.வி.யும் எடப்பாடியின் தலைமைக்கு கீழ் பணியாற்ற மாட்டார்கள். அதனை அவர்களும் விரும்பமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியாலும், தனக்கு கீழ் அவர்களை பணியாற்றுவதை விரும்பமாட்டார்.
இதற்கு இணைப்பு நடக்காமல் இருந்தாலே சரி… என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி. களத்தில் நின்றாலும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த தி.மு.க.வால், அடுத்து எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியவில்லை. ஆனால், 2011ல் ஆட்சியைப் பிடித்தார்கள்.
எனவே, வரும் 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பது உறுதி. அவர்கள் மூவரையும் சேர்த்து கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மாஜிக்களிடம் அடித்துக் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..?